CHENNAI:
லைக்கா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரித்திருக்கும்” சந்திரமுகி 2″ திரைப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் பி.வாசு.
இதில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத்,வடிவேலு,ராதிகா சரத்குமார்,லட்சுமி மேனன்,மஹிமா நம்பியார், ராவ் ரமேஷ், சுரேஷ் மேனன், விக்னேஷ், ஒய்.ஜி.மகேந்திரன், ரவி மரியா, ஸ்ருஷ்டி டாங்கே, சுபீக்ஷா,சாய் ஐயப்பன், சத்ரூ,கார்த்திக் சீனிவாசன்,சி.ரங்கநாதன், தேவி,பாவனா,பேபி மானஸ்வி,மாஸ்டர் சஞ்ஜீவ், மாஸ்டர் தர்சித், பேபி தீக்ஷா
தொழில்நுட்ப கலைஞர்கள் :இசை – எம்.எம்.கீரவாணி, ஒளிப்பதிவாளர் – ஆர்.டி.ராஜசேகர், கலை இயக்குனர் – தோட்டா தரணி, எடிட்டிங் – ஆண்டனி ,பாடலாசிரியர்கள் – யுகபாரதி – மதன் கார்க்கி- விவேக் – சைத்தன்ய பிரசாத், நடன பயிற்சி – கலா, தினேஷ், பாபா பாஸ்கர், சண்டைப்பயிற்சி – கனல் கண்ணன், ஸ்டண்ட் சிவா, ரவி வர்மா, ஓம் பிரகாஷ், லைக்கா புரொடக்ஷன்ஸ் தலைமை – ஜி.கே.எம்.தமிழ்குமரன்.
பெரிய பணக்கார குடும்பத்தை சேர்ந்த ராதிகா சரத்குமார் தன் அண்னன் ம்ற்றும் சொந்த பந்தங்களுடன் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் அவருடைய மூத்த மகள் காதலனுடன் ஓடிப்போய் கலப்பு திருமணம் செய்து கொண்டதால், தன் குடும்பத்தில் உள்ள அனைவரும் அவர்களை ஒதுக்கி வைத்து விடுகின்றனர். காதல் திருமணம் செய்துக் கொண்ட ராதிகா சரத்குமாரின் மகளும் மருமகனும் ஒரு நாள் ஒரு விபத்தின் காரணமாக, அவர்களது இரண்டு குழந்தைகளை விட்டு விட்டு இறக்கின்றனர். அனாதைகளான இரண்டு குழந்தைகளை பராமரிக்கும் பொறுப்புகளை ராகவா லாரன்ஸ் ஏற்றுக் கொள்கிறார். அதன் பிறகு ராதிகாவின் இரண்டாவது மகள் லட்சுமி மேனன் காரில் விபத்துக்குள்ளாகி நடக்க முடியாமல் வீல் சேரில் அமர வைத்து அழைத்து செல்கிறார்கள். இந்த சூழலில் ராதிகா சரத்குமாரின் குடும்பத்தாருக்கு தொடர்ந்து பல அசம்பாவிதங்கள் தொடர்ந்து நடக்கின்றன.
இதனால் வேதனையடைந்த ராதிகா சரத்குமார் ஆன்மீக குரு, ராவ் ரமேஷிடம் தங்கள் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனைகளைப்பற்றி கூறுகிறார். அப்போது அவர் உங்களது குடும்பத்துடன் சென்று குலதெய்வ கோவிலில் பூஜை செய்தால் எல்லா பிரச்சினைகளும் தீரும் என்று அறிவுறுத்துகிறார். அந்த பூஜையில் ராதிகா சரத்குமார் ஒதுக்கி வைத்திருக்கும் மகளின் குழந்தைகளையும் பூஜையில் பங்கு கொண்டால்தான், குடும்பத்தில் நிம்மதி கிடைக்கும் என்று கூறுகிறார். அவர்கள் பூஜை செய்ய வேண்டிய குலதெய்வகோவில் வேட்டையன் அரண்மனைக்கு அருகில் உள்ளதால் , வடிவேலு பராமரிப்பில் இருக்கும் வேட்டையபுரம் அரண்மனையில் தங்கி வழிபாடு செய்ய பயணம் மேற்கொள்கின்றனர். ராதிகா சரத்குமாரை விட்டு பிரிந்த அவரது மகளின் குழந்தைகளும், அவர்களின் பாதுகாப்பாளரான ராகவா லாரன்ஸும் அவர்களுடன் வேட்டையபுரத்திற்கு செல்கிறார்கள். அந்த அரண்மனைக்கு சொந்தக்காரர் வடிவேலு என்பதால் அரண்மனையை ராதிகா சரத்குமாரின் குடும்பத்திற்கு குத்தகைக்கு விடும் போது சந்திரமுகியின் பழி தீர்க்கும் ஆவி இருப்பதைப் பற்றி அவர்களுக்கு சொல்லாமல் இருக்கிறார்.
ஆனால் ராதிகா சரத்குமார் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் வீட்டின் தெற்கு நோக்கி கண்டிப்பாக செல்ல கூடாது என்று எச்சரிக்கிறார். தங்களது குலதெய்வத்தை வழிபடுவதற்கு உண்டான அனைத்து ஏற்பாடுகளையும் வடிவேலு மூலம் ராதிகா சரத்குமார் செய்கிறார். ஆனால் இவர்களது குலதெய்வ கோயிலில் யாரும் அங்கு வந்து வழிபடாமல் இருப்பதால் பராமரிப்பு இல்லாமல் மிகவும் பாழடைந்த நிலையில் கோயில் இருக்கிறது. இந்நிலையில் அந்த அரண்மனையில் வினோதமாக சில அமானுஷ்ய சம்பவங்கள் நடக்கின்றன. அந்த அரண்மனையில் சந்திரமுகியின் பழி தீர்க்கும் ஆவி இருப்பதைப் பற்றி வடிவேலு சொல்லாததால், அந்த ஆவி ஊனமுற்ற ராதிகா சரத்குமாரின் மகளான லட்சுமி மேனன் உடலுக்குள் புகுந்து விடுகிறது. இதையடுத்து இந்த குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவருக்கும் பலவிதமான பிரச்சனைகள் நடக்கிறது. இறுதியில் சந்திரமுகியின் ஆத்மா லட்சுமி மேனனை விட்டு சென்றதா? குல தெய்வ கோவிலில் ராதிகா சரத்குமார்ரின் குடும்பத்தினர் வழிபாடு செய்தார்களா? என்பதுதான் இந்த “சந்திரமுகி 2” திரைப்படத்தின் மீதிக்கதை.
கதாநாயகனாக நடித்திருக்கும் ராகவா லாரன்ஸ் வேட்டையன் கதாபாத்திரத்திரத்தில்தான் நடிக்கிறார் என நினைத்தபோது, வேட்டையனின் தோழராக வந்து எதிர்பாராத திருப்பத்தை கொடுத்திருக்கிறார். ‘வேட்டையனும் நானே, செங்கோட்டையனும் நானே’ என்று சொல்லும் காட்சிகளில் அந்த கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து மிக சிறப்பாக தன் நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். பாண்டியன் என்ற கதாப்பத்திரத்தில் காமெடியையும் தனக்கே உரிய பாணியில் நடனம், ரொமான்ஸ் என அருமையாக தனது நடிப்பில் கலக்கி இருக்கிறார்.
சந்திரமுகியாக நடிக்கும் கங்கனா ரணாவத் கதைக்கேற்றபடி இயல்பான நடிப்பில் அசத்தி இருக்கிறார். அழகு தேவதையாக தன் நடிப்பில் சிறப்பு செய்து ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார். ஆனால் அவருக்கான கதாபாத்திரம் சிறியது என்பதால் நடிப்பில் அதிகமான ஸ்கோப் இல்லை.
சக்கர நாற்காலியில் உட்கார வைத்து லட்சுமி மேனனை அழைத்து வரும்போது, அவரது உடலில் சந்திரமுகியின் ஆத்மா புகுந்தவுடன் ஆக்ரோஷமான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரையும் அசர வைத்து விட்டார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரீஎன்ட்ரி கொடுத்திருந்தாலும் சந்திரமுகி ஆவி புகுந்தவுடன் உண்மையிலேயெ பேயாட்டம் போட்டு இருக்கிறார்.
வடிவேலுவின் நகைச்சுவையில் சில காட்சிகள் மட்டுமே சிரிக்க வைக்கிறது. ராகவா லாரன்ஸ்-வடிவேலு இருவரும் இணைந்து நடிக்கும் காட்சிகளில் சிரிப்பு மழை அலை எழுகிறது.
ராதிகா சரத்குமார் ,ராவ் ரமேஷ் , லட்சுமி மேனன் ,மஹிமா நம்பியார், ஸ்ருதி டாங்கே, சுபிக்ஷா, சுரேஷ் மேனன், ரவி மரியா, விக்னேஷ், ஆர் எஸ் சிவாஜி , மனோபாலா, ஒய் ஜி ,மஹேந்திரன் என நடித்தவர்கள் அனைவரும் தங்கள் கொடுத்த பணியை சிறப்பாக செய்துள்ளனர் .
இப்படத்தில் வரும் காட்சிகளை பிரமாண்டமாக படமாக்கியிருக்கும் ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர். படம் முழுவதையும் கலர்புல்லாக காட்சிப்படுத்தி மிகவும் அருமையாக ரசிகர்களை ரசிக்க வைத்திருக்கிறார்.
எம்.எம்.கீரவாணியின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகமாக இருக்கிறது. பின்னணி இசை கதைக்கு ஏற்ப ரசிக்க வைத்திருக்கிறது.
‘சந்திரமுகி’ முதல் பாகத்தில் இருந்த அதே மாதிரியான பங்களாவில் ராதிகா மற்றும் குடும்பத்தினர் சென்ற பிறகு சந்திரமுகி ஆத்மாவால் ஏற்படும் பிரச்சனையை மையமாக வைத்து இந்த திரைப்படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் பி.வாசு. இப்படத்தில் பல குறைகள் இருந்தாலும் குடும்பமாக சென்று பார்க்க கூடிய விதத்தில் காட்சிகளை புகுத்தியிருப்பதை பாராட்டலாம். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து முதல் பாகத்தில் எவ்வளவு அருமையாக சுவாரஸ்யமாகவும் விறுவிறுப்பாகவும் பரபரப்பாக இருந்ததோ அதேபோல் இரண்டாம் பாகத்தையும் ராகவா லாரன்ஸை வைத்து மிகச் சிறப்பாக இயக்கி இருக்கிறார் இயக்குனர் பி வாசு.
மொத்தத்தில் லைக்கா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரித்திருக்கும் “சந்திரமுகி 2” படத்தை அனைவரும் குடும்பத்தோடு சென்று கண்டு களிக்கலாம்.